Tamilnadu

நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு வழக்கு : 6 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ் !

பிரபல நடிகையும் பாஜக முன்னாள் பிரமுகருமான கௌதமி, பண மோசடி குறித்து அண்மையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான சொத்து, பத்திரம், பணம் உள்ளிட்டவையை மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

அதாவது கௌதமியின் சுமார் 8.3 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாக கூறி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகாரத்தை பெற்று கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இடத்தினையும் அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பை சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனை செய்து விட்டு, நடிகை கெளதமிக்கு ரூ. 4.10 கோடி மட்டும் விற்பனை தொகையாக கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகு தான், தனக்கு சொந்தமான இடத்தினை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்து விட்டு தனக்கு வெறும் ரூ. 4.10 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றிய விவரம் கௌதமிக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இவர் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், அவரது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது, நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தற்போது தலைமறைவாக இருந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்கள் கேரளாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளா திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து டிரான்ஸிட் வாரண்ட் பெற்று கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கௌதமியின் சொத்து அதிக விலைக்கு விற்கப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக சென்னை அண்ணா நகர் மேற்கு 6-வது அவன்யூ பகுதியை சேர்ந்த பலராமன் (64) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அன்று சொத்தை முடக்கியவர், இன்று தீர்ப்பளித்துள்ளார்” - நீதிபதி குறித்து என்.ஆர்.இளங்கோ கருத்து !