Tamilnadu

மிக்ஜாம் புயல் பாதிப்பு : இரவு பகல் பாராமல் தொடர்ந்து களத்தில் நிற்கும் திராவிட மாடல் அரசு !

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரும் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் புயல் அன்று 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, மக்களுக்கு தேவையானவை இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த அதி பயங்கர கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. 3, 4 ஆகிய தேதிகளில் இடைவிடாமல் பெய்த பயங்கர கன மழையுடனும் உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கினர். அதோடு இரவு, பகல் என்றும் பாராமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்தனர்.

மேலும் அந்தந்த தொகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர். மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்டிருந்த மின் விநியோகம், சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த மழை தண்ணீர் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டு வரும் நிலையில், மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றும் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ-க்கள், தி.மு.கவினர் என பலரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது அமைச்சர் கே.என்.நேரு, வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருங்குடி மண்டலம், துரைப்பாக்கம், பல்லாவரம் 200 ரேடியல் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட களப்பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். அதுமட்டுமின்றி அனகாபுத்தூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், போர்வை, உணவு உள்ளிட்டவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Also Read: மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் - 1.1 லட்சம் பேர் மீட்பு : மக்களை பாதுகாத்த திராவிட மாடல் அரசு!