Tamilnadu

”2 நாட்களில் 80% இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்து மழை தண்ணீர் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட திடீர் நகர், கோதாமேடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 5000 குடும்பங்களுக்கு பிஸ்கட், பால் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட அதிதீவிர மீட்பு பணிகள் காரணமாகச் சென்னை 80% இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. 90% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்னும் 24 மணி நேரத்தில் 100% இயல்பு வாழ்க்கை திரும்பும். இன்று மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. மழைநீர் வடிந்த இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் இருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "நம்பவே முடியவில்லை, மழைநீர் வடிகால் பணி வெற்றி கண்டுள்ளது" - திமுக அரசை பாராட்டிய சென்னை பெண்மணி !