Tamilnadu

162 நிவாரண மையங்கள்- 20 சமையல் கூடங்கள் : வேகவேகமாக நடந்து வரும் மீட்புப் பணி!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2477 பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்குவதற்காக 20 சமையல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல், மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மடிப்பாக்கம், பெரியார் நகர், ராம் நகர், பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read: இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சென்னை : களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நேரில் ஆய்வு!