Tamilnadu

ED அதிகாரி லஞ்சம் பெற்ற விவகாரம்: “மோடி ஆட்சியின் ஊழல், மத்திய முகமைகளில் ஊடுருவியுள்ளது” - CPIM கண்டனம்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் அரசு மருத்துவர் ஒருவரது சொத்து வழக்கை முடித்து வைப்பதாக கூறி ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்ததால் பேரம் பேசி, அவரிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் ரூ.31 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த மருத்துவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், அதிகாரிகள் திட்டம் தீட்டி, ரசாயனம் தடவிய பணத்தை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பினர். அப்போது அதனை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி, போலீசாரால் கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் நேற்று போலீசார் சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இவர் பல நபர்களை இதுபோல் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததும், அதனை சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்ததும் தெரியவந்தது. இதனிடையே மதுரை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இது தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து அவர் நேற்று திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். தொடர்ந்து விசாரித்த நீதிபதி, அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார்.

இதனிடையே அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறி அவரிடம் விசாரணை நடத்தி லஞ்சம் பெற்றுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சி.பி.எம் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு :

"ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 3 கோடி பேரம் பேசி, ரூ.31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ. 20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

சில நாட்கள் முன்புதான் ராஜஸ்தானில் இதே போல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார். ஏற்கனவே, ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பாஜகவை சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பாஜகவினர் வீட்டில் சோதனைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது என அடுக்கடுக்கான முறைகேடுகளை பார்த்து வருகிறோம்.

சுயேச்சையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்கள் அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது."

Also Read: பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்க முயற்சியா ? - சபாநாயகருக்கு கடிதம் எழுதிய டேனிஷ் அலி MP !