Tamilnadu

“இவ்வளவு நாள் தூங்கிவிட்டு, இப்போது அனுப்புவதற்கு என்ன காரணம்?” - ஆளுநர் ரவிக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி !

சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கூறியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய கூறியும் பல முழக்கங்களை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளை சார்ந்த சார்ந்தவர்கள் தொடர் முழுக்க கூட்டங்களை நடத்தினர். இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, எம்.பி கிரிராஜன், மதிமுக மாநில பொருளாளர் செந்தில் தீபன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “வரும் 2024 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்றக் கூறியும், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றக் கூறியும் கண்டிப்பாக இருக்கும்.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. ஆளுநர் அரசியல் சானத்திற்கு எவ்வித மரியாதையும் தரவில்லை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஆளுநர், அதை மீறும் போது, எப்படி ஒன்றிய அரசு அவரை நீடிக்க விடுகிறது என்பது வேடிக்கையாகவும், கேள்வியாகவும் உள்ளது.

ஆளுநருக்கு குட்டுக்கு மேல் குட்டு வைக்கிறது உச்சநீதிமன்றம். இன்று வழக்கு வரக்கூடிய நிலையில், ஏற்கனவே இந்த அரசால் நிறைவேற்று அனுப்பப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக சொல்லி இருக்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றம் சரியான கேள்வி கேட்டிருக்கிறது. இவ்வளவு நாள் தூங்கிவிட்டு, இப்போது அனுப்புவதற்கு என்ன காரணம்?

உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்துள்ளது. மேலும், அவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே ஆளுநர் தான் முதலமைச்சர் அழைத்து கேட்க வேண்டுமே தவிர, முதலமைச்சர் செல்ல மாட்டார் என்று கூறியிருக்கிறது. இதன் முழு அர்த்தத்தை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் ஆளுநரை சென்று சந்திக்க வேண்டியதில்லை. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. அவர் மாடா? மனிதரா என்பது நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார்.

Also Read: மொழி திணிப்பு : “இதனை வடமாநிலத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..” - ஆர்.எஸ்.பாரதி பேச்சு !