Tamilnadu

"அம்மையார் ஜெயலலிதாவை விட பாஜகதான் EPS-க்கு முக்கியம்" - அதிமுகவை விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு !

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பப்பெற்ற மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

பின்னர் ஜெயலலிதா பெயரிலிருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றிய சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து ஷடாந்தரத்தில் பேசிய பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், "பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறினாலும், உள் நீரோட்டம் இருக்கிறது. ஆளுநரை எதிர்த்தால், மோடியை எதிர்த்தது போல என்பதை உணர்ந்து அதிமுகவினர் இன்றைக்கு வெளிநடப்பு செய்துள்ளனர். இதை தான் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று குறிப்பிடுவார்கள்” என கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் , ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஓராண்டு காலம் இந்த மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எந்த வித காழ்புணர்சியும் இல்லாமல் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் தொடர்பான மசோதா இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் தொடர்பான மசோதாவுக்கு அவையில் ஆதரவு அளிக்கக் கூடிய தார்மீக கடமை உடைய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நொண்டி சாக்கு ஒன்றை கண்டுபிடித்து வெளிநடப்பு செய்துள்ளார். இது வேற ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க அரசியல்.

இதிலிருந்து பாஜகவுடன் அதிமுக ரகசிய தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிந்துள்ளது. நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன் என்பதை காட்டும் விதமாக அதிமுக தற்போது அரசியல் செய்து வருகிறது.அம்மையார் ஜெயலலிதா பெயரை வைத்துள்ள மசோதாவை கூட நிறைவேற்றாமல் பாஜகவுடன் இருப்பது தான் நமக்கு முக்கியம், நாம் ஏதாவது வார்த்தை கூறிவிட்டால் ஏதாவது பாஜகவால் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாக அவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்துள்ளார்கள் அதிமுகவினர். இன்றைக்கும் பாஜகவுடன் வைத்துள்ள தொடர்பு காரணமாக தான் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதை தான் அமைச்சர் துரைமுருகன் பூனைக்குட்டி வெளியே வந்து இருக்கிறது என்று சொன்னார். நாங்கள் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று சொல்லக் கூடியவர்கள், இன்று வெளிப்படையாக பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயரை கூட வைக்காமல் திருப்பி அனுப்பி இருக்கிற மசோதாவை கண்டிக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் உள்ளனர். ஜெயலலிதா பெயரில் கட்சியை நடத்தி கொண்டு, அவரது பெயரை பல்கலைகழகத்துக்கு வைப்பதற்கு நிராகரிக்கப்பட்ட மசோதாவை கேட்க அதிமுகவினர் திராணி இல்லாமல் உள்ளனர்"என்று கூறியுள்ளார்.

Also Read: ”வேந்தராகப் பிரதமர் பதவி வகிப்பது எப்படி?” : பேரவையில் பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பொன்முடி!