Tamilnadu

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைசட்டம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், சட்டத்தை இயற்றத் தமிழக அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இதையடுத்து அரசு தரப்பில், சட்ட கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, செப்டம்பர் மாதம் 13ம் தேதி, இந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களைத் தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் நீண்ட நாட்கள் மசோதாவைக் கிடப்பில் வைத்திருந்து பிறகு மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆளுநர் வேறு வழியில்லாமல் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே அமலுக்கு வரும்..”: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!