Tamilnadu

”சோதனை என்ற பெயரில் 5 தினங்களாக அச்சுறுத்திய வருமான வரித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு!

ஒன்றிய பா.ஜ.க அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தி.மு.கவின் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் திட்டமிட்டு சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஐந்து நாட்களாகச் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை குறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு "வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் கற்பனையின் உச்சத்துக்குப் போய் சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமது பி.ஏ வையும், கார் ஓட்டுநரையும் அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி தேவையற்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

5 தினங்களாக அச்சுறுத்தல் வேலையை மட்டுமே ஐ.டி அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் தொடர்புப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட கற்பனை கதைகளைக் கட்டி விட்டுள்ளார்கள் .

உழைத்த பணத்தில்தான் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். யாரிடமும் எதற்காகவும், எங்கேயும் கை நீட்டியதில்லை. வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்து வருகிறேன். வருமானத்துக்கான வரியை முறையாகச் செலுத்தி வருகிறேன். சட்டப்படி நடந்து கொள்பவர்கள்தான் திமுகவினர். வருமான வரித்துறை என்பது பா.ஜ.க.,வின் ஒரு அணியாக மாறிவிட்டது. எந்த அச்சுறுத்தலுக்கும் திமுக அஞ்சாது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”எத்தனை ED சோதனைகள் நடத்தினாலும் திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!