Tamilnadu
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் : முதலமைச்சர் உத்தரவு!
தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு, தொழிலாளர்கள் நலனை கண்ணின் இமைபோல் காத்து வருகிறது.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும், ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும்பொருட்டு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ரூ.29.38 கோடியினை வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில், 1,093 பணியாளர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, பணி ஓய்விற்குப் பிறகும் தங்களுடைய குடியிருப்புகளை காலி செய்யாத தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும்
ரூ.14 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்க முடிவு செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மேற்காணும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடம்பெயர ஏதுவாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குடியிருப்புகளின் பயனாளிகள் பங்களிப்பாக ரூ.13.46 கோடியை ஒரு சிறப்பு நிகழ்வாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இவற்றின் வாயிலாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் புலனாகும்.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு தாங்கள் பெற்றுவரும் தினக்கூலி ரூ.375/-ஐ, திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியை நடைமுறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, நாளொன்றுக்கு ரூ.438/- ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், 3-11-2023 அன்று தங்களைச் சந்தித்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களிடம் இந்தக் கோரிக்கையையும், நீண்டகாலமாக உள்ள இதர கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் மேற்படி கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, நிறைவேற்றிட வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்களும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனியார் தோட்டத் தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438/- வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும். அதோடு, TANTEA தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் (TANTEA) பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான ஆணைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு வந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், TANTEA பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக TANTEA-க்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள்.
அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !