Tamilnadu

காலியாக கிடக்கும் மருத்துவ இடங்கள்.. கடிதம் எழுதியும் பதிலளிக்காத ஒன்றிய அரசு - அமைச்சர் மா.சு விமர்சனம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்வி இயக்குனரக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இலட்சினையை திறந்து வைத்து பன்னாட்டு மருத்துவ ஆய்வு இதழினை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி இயக்கத்தின் இலட்சினை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகளவில் 36 மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், பன்னோக்கு மருத்துவமனை மொத்தம் 120 மருத்துவமனைகள் என இத்துறை சிறப்பாக செயல்படுகிறது. இதனுடைய அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மருத்துவ ஆராச்சியை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்கமாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இப்போது இலட்சினையை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி இயக்ககம் என்பது மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கமாக இன்று முதல் மாறுகிறது. பன்னாட்டு மருத்துவ ஆய்வு தொகுப்பு வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறது இத்துறை. மாவட்ட உள்ளிருப்பு பயிற்சி தொகுப்பு பட்டியலில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்கள் பயிற்சி மேற்க்கொள்ள வசதியாக மருத்துவமனைகளின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அவர்கள் ஜனவரி மாதம் முதல் பயிற்சி மேற்க்கொள்வார்கள். மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குநராக பெண்கள் சாதனை புரிந்துள்ளார்கள். அந்த வகையில் 35 ஆண்டுகாலமாக இத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெறவுள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர் அவர்களுக்கு பாராட்டுகள்.

சென்னை கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி கட்டிடத்தின் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. ஒன்றரை ஆண்டுக்குள் ஒரு புதிய முயற்சியாக வேறு எந்த மாநில அரசும் மேற்க்கொள்ளாத ஆராய்ச்சி கட்டிடமாக உருவாகவுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளநிலை மருத்துவ படிப்பு இடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் இல்லையென்றால், அந்த வாய்ப்பை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் தற்போது வரை பதில் இல்லை. கடந்த ஆண்டு கூட 6 இடங்கள் நிரப்பாமலே விடப்பட்டது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியான கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது" என்றார்.

Also Read: “கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் !