Tamilnadu

”சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்?” : ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி!

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது திடீர் அக்கறை காட்டும் ஆளுநர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடமைத் தலைவராகவும் திகழும் நம் மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் அறிவித்தார்.

இதையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான ஆவணம் ஆளுநர் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட மறுத்து வருகிறார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் சங்கரய்யா கல்லூரி படிப்பை இழந்தார். 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் சங்கரய்யாவுக்கு வழங்கும் டாக்டர் பட்டம் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் ஆளுநர் கையெழுத்திட மறுப்பது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

நீட் தேர்வால் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் மாணவர்களின் நிலைப்பாடு. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்துள்ள நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்திற்கு மாணவர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஆளுநர் ரவி”: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!