Tamilnadu

"ஆளுநர் RN ரவிக்கு ஒன்றும் புரியவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார்" -அமைச்சர் ரகுபதி விமர்சனம் !

புதுக்கோட்டை அருகே உள்ள நத்தம்பண்ணை ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ். ரகுபதி "ஆட்சி மாற்றம் ஏற்படும் போது கடந்த ஆட்சி செய்தவர்கள் தொடங்கிய திட்டத்தை ஆட்சி செய்பவர்கள் திறந்து வைப்பது வழக்கமான ஒன்றுதான்.

எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போன்று அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கிய திட்டத்தைதான் நாங்கள் தொடங்கி வைக்கிறோம் என்று கூறுவது தவறு. கிங்ஸ் மருத்துவமனை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கியதுதான். ஒரு சில திட்டங்கள் மட்டும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். அது இயற்கையான ஒன்று

ஒரு ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி செயல்பட கூடாது என்பதற்கு அளவுகோல் உள்ளது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் வரம்புமீறி பேசியதற்கு டி.ஆர் பாலு விளக்கம் கொடுத்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. சுதந்திர போராட்ட தியாகிகள் தலைவர்கள் ஆகியோர்களுக்கு நினைவு மண்டபங்கள் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களது நினைவை விழாக்கள் எடுத்து நடத்தி வரும் ஒரே அரசு திமுக அரசு தான். இந்த வரலாறு எல்லாம் தமிழில் இருப்பதால் ஆளுநருக்கு புரியவில்லை, அவர் யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது போல்,காங்கிரஸ் திமுகவை வளர்க்க வேண்டியதில்லை. திமுக ஏற்கனவே வளர்ந்த கட்சி தான். நாங்கள் எங்களை வளர்த்துக் கொள்கிறோம். அவர்கள் அவர்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பாஜகவின் B டீம் தான் அதிமுக,சிறுபான்மையர்கள் வாக்கு ஒருபோதும் அதிமுகவிற்கு கிடைக்காது. சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வந்த போது இபிஎஸ் எங்கே சென்றார்.எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பது,ரொம்ப மகிழ்ச்சியான செய்தி, அவர் எப்போதுமே நகைச்சுவையாக பேசக்கூடியவர், இதை ஒரு ஜோக்கா எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

Also Read: INDIA கூட்டணியால் அச்சம் : CBSE பாட புத்தகத்தில் இந்தியா பெயரை நீக்க ஒன்றிய அரசின் NCERT பரிந்துரை !