Tamilnadu

ரூ.25 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு : நடிகை கெளதமி அளித்த புகாரில் 6 பேர் மீது பாய்ந்த வழக்கு !

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் கெளதமி. தமிழில் 90-களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த சூழலில் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 1997-ல் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜகவில் இருந்து வந்த இவருக்கு அங்கே பெரிதாக மரியாதை இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சில காலம் அக்கட்சியில் இருந்து விலகி இருந்த இவர், மீண்டும் 2017-ல் பாஜகவில் இணைந்தார். அப்போது இருந்து சில மணி நேரம் முன்பு வரை பாஜகவில் இருந்து வந்த இவர், தற்போது விலகியுள்ளார். இதற்கு காரணம் சொந்த கட்சிக்காரர்களே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளார் கெளதமி. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் கொடுப்பதாக கூறி வந்த பாஜக, அப்போது இவரை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமித்தது.

இதனாலே பாஜக மீது பெரும் அதிருப்தியில் இருந்து வந்த இவர், தற்போது தன்னிடம் பண மோசடி செய்த நபருக்கு பாஜக உடந்தையாக இருப்பதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். அழகப்பன் என்பவர் நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்து, பாத்திரம், பணம் உள்ளிட்டவையை மோசடி செய்துள்ளார். இவருக்கு பாஜக தலைமையும் உடந்தையாக இருப்பதாக கூறி, பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் இது தொடர்பான நடிகை கௌதமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அதன்பேரில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நார்ச்சல் அழகப்பன், அவரது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது, நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read: “பாஜகவில் சேர்ந்தால் இதுதான் பரிசு !” - பணம், சொத்தை இழந்த நடிகை கெளதமி ஆவேசம் !