Tamilnadu

“பாஜகவில் சேர்ந்தால் இதுதான் பரிசு !” - பணம், சொத்தை இழந்த நடிகை கெளதமி ஆவேசம் !

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் கெளதமி. தமிழில் 90-களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த சூழலில் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 1997-ல் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜகவில் இருந்து வந்த இவருக்கு அங்கே பெரிதாக மரியாதை இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சில காலம் அக்கட்சியில் இருந்து விலகி இருந்த இவர், மீண்டும் 2017-ல் பாஜகவில் இணைந்தார். அப்போது இருந்து சில மணி நேரம் முன்பு வரை பாஜகவில் இருந்து வந்த இவர், தற்போது விலகியுள்ளார். இதற்கு காரணம் சொந்த கட்சிக்காரர்களே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளார் கெளதமி. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் கொடுப்பதாக கூறி வந்த பாஜக, அப்போது இவரை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமித்தது.

இதனாலே பாஜக மீது பெரும் அதிருப்தியில் இருந்து வந்த இவர், தற்போது தன்னிடம் பண மோசடி செய்த நபருக்கு பாஜக உறுதுணையாக இருப்பதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜக நிர்வாகியான அழகப்பன் என்பவர் கெளதமியிடம் பண மோசடி செய்துள்ளார். இவருக்கு பாஜக தலைமையும் உறுதுணையாக இருப்பதாக கூறி, பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

"மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட உறுதி தன்மையோடு இருந்தன். ஆனால், இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் அந்த நபருக்கு தீவிரமாக உதவுகிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டுள்ளது.

நான் 17 வயதிலிருந்தே பணிபுரிந்து வருகிறேன். சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக எனது தொழில் வாழ்க்கை இருந்தது. எனது வாழ்நாள் முழுவதும் உழைத்தேன், உழைப்பின் மூலம் இந்த வயதில் நான் பொருளாதார ரீதியாக என் மகளின் எதிர்காலத்தை வழங்கவும் முடியும். அதனால் நானும் எனது மகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்துள்ளார்.

எனது பெற்றோர்களின் இழப்பு மற்றும் கைக்குழந்தையுடன் நான் தவித்த காலத்தில் எனக்கு அழகப்பன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதரவாக இருந்தார். இந்த காலத்தில் நிலம் மற்றும் சொத்து பத்திரங்களை விற்பனைக்கான ஆவணங்களை அவரிடம் வழங்கினேன். அதில் மோசடி செய்துள்ளது சமீபத்தில் தான் தெரியவந்தது. தன்னையும் தன் குழந்தையையும் அவரது குடும்பத்தின் அங்கமாக இருப்பது போல ஏமாற்றியுள்ளார்.

நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துகள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக முதலமைச்சர், காவல்துறை, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து உரிய சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறேன். அதேபோல 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதும், தமிழ்நாடு பாஜக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வைப்பதாக தலைமை தெரிவித்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் போட்டியிட அறிவிக்கவில்லை. ஆனாலும் பாஜகவிற்காக பணியாற்றினேன். 25 ஆண்டுகள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், முழுமையான ஆதரவில்லாமல் இருக்கிறேன்

இந்த மோசடி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். இருந்த போதும், முதலமைச்சர், காவல்துறை, நீதித்துறை எனக்கு உரிய நீதியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன். எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாகவும் ஒற்றைப் பெற்றோராகவும் நீதிக்காகப் போராடுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாஜகவில் இருந்து அநேக முக்கிய உறுப்பினர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஆபாச பேச்சு சர்ச்சையில் சிக்கிய பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை எதிர்த்து காயத்ரி ரகுராம் குரல் எழுப்பியதால், அவரை தமிழ்நாடு பாஜக தலைமை அண்ணாமலை, கட்சியில் இருந்து நீக்கினார். தொடர்ந்து பாஜகவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நடிகை ஜெய பிரதாவுக்கு சிறை.. ரூ.20 லட்சம் டெபாசிட்.. 15 நாட்களுக்குள் சரணடைய சென்னை நீதிமன்றம் உத்தரவு !