Tamilnadu

பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர். இங்கு பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், அதன் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்தவர் ஆவார்.

அந்த கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்ட இவரது ஆன்மீக சேவையை பாராட்டி, 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. ஆன்மீகத்தின் அடையாளமாக காணப்படும் இவருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், ஜிபி செந்தில், ஜிபி அன்பழகன் என்ற மகன்களும் உள்ளனர்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் முறையை மட்டுமின்றி, மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையையும் கொண்டு வந்து, ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டினார். இதனாலே இந்த கோயிலுக்கு நாள்தோறும் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

சபரிமலைக்கு எப்படி ஆண் பக்தர்கள் விரதம் இருந்து மாலை போட்டு வழிபடுவாரோ, அதே போல் இந்த கோயிலுக்கு பெண் பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து மாலை போட்டு கோயிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இவர் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு தனது இல்லத்தில் உயிரிழந்தார். தனது 82-வது வயதில் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவு பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் மறைந்த பங்காரு அடிகளாரருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Also Read: “ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !