Tamilnadu

காவிரி விவகாரம் : ஒன்றிய அரசை கண்டித்து 1 லட்சம் கடைகள் அடைப்பு.. வெறிசோடிய டெல்டா மாவட்டங்கள் !

கர்நாடகாவிடம் காவிரியில் இருந்து 24,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் வெறும் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. எனினும் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக கர்நாடகத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினாலும், கர்நாடக அரசு நீர் திறந்து விட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கேட்ட கன அடி நீரை காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறந்து விட மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கண்டனம் தெரிவித்தார்.

எனினும் கர்நாடக அரசு அதற்கு செவி மடுக்கவில்லை. தொடர்ந்து நேற்றைய முந்தினம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்நாளில் காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் டெல்டா பகுதிகளான தஞ்சை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி தொடங்கிய இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தஞ்சையில் 10 ஆயிரம், திருவாரூரில் 30 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Also Read: ரெடியா மக்களே.. அரசு பேருந்தில் இன்று முதல் தீபாவளிக்கு முன்பதிவு தொடக்கம்.. முழு விவரம்!