Tamilnadu

”நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை” : அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

ஒன்றிய அரசு வழங்கும் அரிசியைப் பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்க ekyc (இணைய வழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள்) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது விநியோகத் திட்ட அங்காடிகளிலுள்ள கருவி மூலம் கைரேகைப் பதிவு அல்லதுகருவிழி வழிப் பதிவு வழியாகத் தங்கள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டு 45% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டிருந்தது.

சில இடங்களில் அனைத்து உறுப்பினர்களும் வந்தால்தான் பொருள்கள் பெற முடியும் என்று தவறுதலாகக் கூறப்பட்டதாகக்கேள்விப்பட்டவுடனே அவ்வாறு செய்யக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் குடும்ப அட்டைகள் இதனால் இரத்து செய்யப்படமாட்டாது எனவும் குடும்ப அட்டைதாரர்கள் வழக்கம்போல் கடைக்கு வந்து தங்களது பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமாக தெரிவித்துள்ளார்

Also Read: 5 மாநில தேர்தல்: இந்தியா கூட்டணிக்கு சாதகமாகும் கருத்து கணிப்புகள்.. ம.பியில் பாஜகவை வீழ்த்தும் காங்கிரஸ்