Tamilnadu

"பா.ஜ.கவுக்கு முட்டுக்கொடுக்கும் அதிமுக'.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

காவிரி விவகாரம் குறித்து அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அரசின் தனித் தீர்மானத்தில் திருத்தம் கேட்பது அபத்தமான ஒன்று என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி," காவிரி விவகாரம் குறித்து அடிப்படை புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும். இதனைக் கண்காணிக்கத்தான் காவிரி மேலாண்மை குழு ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி உணரவில்லையா?

காவிரி விவகாரத்தில் தி.மு.க அரசு துணிச்சலாகச் செயல்படவில்லை என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி முதலில் தன்னுடைய துணிச்சலைச் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கலாம். சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்பதைச் சரியாக அறிந்து கொள்ளாமல் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு முட்டுக் கொடுக்கும் நோக்கில் உளறி இருக்கிறவர் பழனிச்சாமி.

காவிரி விவகாரத்தில் மோடி அரசைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற நோக்கில் B'டீமாக அ.தி.மு.க செயல்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளார். காவேரி விவகாரம் பற்றியும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அடிப்படை புரிதல் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் பழனிசாமி பேசியுள்ளார். கூட்டணியிலிருந்து விலகி இருந்தாலும் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து வரும் பா.ஜ.க அதி.மு.க பாதுகாப்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் காரணமாகக் கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 21 நாட்கள் முடங்கியதாகக் கூறுவது பொய். 2021 ஆம் ஆண்டு ரபேல் பிரச்சனை மற்றும் தெலுங்கு மாநில பிரச்சனைகள் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியது" என தெரிவித்துள்ளார்.

Also Read: "நான் நிரூபிக்கவா?".. பொய் சொன்ன பழனிசாமிக்கு பேரவையிலேயே பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!