Tamilnadu

இனி TTF வாசனால் 10 ஆண்டுக்கு பைக்கை தொடவே முடியாது.. செக் வைத்த காஞ்சிபுரம் RTO!

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

மேலும் இவர் பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாகச் செல்லுவது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் அதிவேகமாக பைக்கை ஓட்டுவதற்கு போலிஸார் வழக்குப் பதிவு செய்து எச்சரிக்கை விடுத்தாலும், மீண்டும் மீண்டும் வேகமாகவே பைக்கை ஓட்டி வருகிறார். இவர் இப்படி பைக் ஓட்டுவதைப் பார்த்து விட்டு இளைஞர்கள் பலரும் வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அண்மையில் இவர் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு ரூ.35 லட்சம் விலை உயர்ந்த SUZUKI நிறுவனத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்றபோது வீலிங் செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் ஓட்டிவந்த வாகனமும் சுக்கு நூறாக நொறுங்கியது. பிறகு TTF வாசன் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.

இதையடுத்து சாலையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலிஸார் TTF வாசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து TTF வாசன் பைக்கை எரித்துவிடலாம், YOUTUBE பக்கத்தை மூடக்கிவிடலாம் எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்நிலையில் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவித்துள்ளது.

Also Read: “TTF வாசன் பைக்கை எரித்துவிடலாம்.. Youtube பக்கத்தை மூடக்கிவிடலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !