Tamilnadu

காஞ்சி : கட்டுப்பாட்டை இழந்த இரயில்.. தண்டவாளத்தில் இருந்து சுவரை உடைத்து சாலையில் புகுந்ததால் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு இரயில் பின்னோக்கி வருகையில், தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரயில்வே கேட் பூட்டப்பட்டிருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் இருந்து இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு உருளைகள் ஏற்றிக்கொண்டு சரக்கு இரயில் ஒன்று வந்துள்ளது. சுமார் 42 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு இரயில் வாகனம் காஞ்சிபுரம் பழைய இரயில்வே நிலையத்திற்கு சென்றது. அப்போது இரயில்வே நிறுத்தப்பட்டிருந்த நிறுத்தப்பட்டிருந்த இந்த இரயில் பின்னோக்கி செங்கல்பட்டு பாதையில் செயல்பட்டது.

அந்த சமயத்தில் இந்த சரக்கு இரயிலின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்து திடீர் விபத்து ஏற்பட்டது. இதில் அந்த இரயில் சுவரை உடைத்து கொண்டு சாலையில் இறங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வேறு இரயில் வருவதற்காக இரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மட்டும் சேதமடைந்தது. விபத்துக்குள்ளான இரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 60 டன் எடை கொண்ட இரும்பு கம்பிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து இரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!