Tamilnadu
வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற ரயில்களின் நேரத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு
இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி டெல்லி - வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை 2019ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்ன 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை - மைசூரு இடையே முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் சென்னை - கோவை இடையே இரண்டாம் கட்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்மையில் மூன்றுவாது வந்தே பாரத் ரயில் திட்டத்தை சென்னை - நெல்லை இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலுக்காக இதுநாள்வரை வழக்கமாக சென்று வந்த வைகை, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களின் நேரத்தை மாற்றி தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) மதுரையிலிருந்து இரவு 09.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.45 மணிக்கு 10 நிமிடம் முன்னதாக புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) மதுரையிலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 04.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும்.
மேலும் மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் (12636) மதுரையிலிருந்து காலை 07.10 மணிக்கு பதிலாக காலை 06.40 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) மதுரைக்கு இரவு 09.15 மணிக்கு பதிலாக இரவு 09.30 மணிக்கு வந்து சேரும். மதுரை - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு பதிலாக காலை 07.00 மணிக்கு 25 நிமிடம் முன்னதாக புறப்படும்.
மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) மதுரையிலிருந்து இரவு 09.35 மணிக்கு பதிலாக இரவு 09.20 மணிக்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மதுரை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்கு பதிலாக அதிகாலை 03.35 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். இந்த கால அட்டவணை மாற்றம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. தென்னக ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பழையபடியே ரயில் சேவை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!