Tamilnadu

மழைக்காக ஒதுங்கி நின்றவர்கள் மீது சரிந்து விழுந்த பெட்ரோல் பங்க் மேற்கூரை: நடந்தது என்ன ?அமைச்சர் ஆய்வு!

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியின் ஆயில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை நேற்று மாலை பெய்த கனமழையில் கீழே விழுந்து சரிந்து விபத்துக்குள்ளானது. சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியின் ஆயில் பெட்ரோல் பங்கில், பங்க் ஊழியர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் கனமழை பெய்ததால் மழைக்காக ஒதுங்கி நின்று உள்ளனர்.

அப்போது கனமழை மற்றும் பலத்த காற்று அடித்ததால் பங்கின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருக்க கூடிய சிறுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுமிக்க கந்தசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் உடற்கூறாய்வு செய்யப்படுவதற்காக இராயாபேட்டை மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அதன்பின் அவரது சொந்த ஊரான மதுராங்கத்திற்கு அவரது உடல் உறவினர்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் அதன் சேதாரங்களை அகற்றும் பணியில் இரவு முழுவதும் சைதாப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் 8 பேர் கொண்ட குழு செயல்பட்டு அகற்றினர்.

இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை குறித்து நேரில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து பங்கின் உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் ஆகியோர் மீது சைதாப்பேட்டை போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: வாச்சாத்தி வழக்கு: ”ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” - CPIM விமர்சனம் !