Tamilnadu
“எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாஜக காப்பாற்றியதா? அச்சுறுத்தியதா?”: பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் பதிவு!
அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசலையும், ஊழல் கோப்புகளையுன் பயன்படுத்தி அதிமுகவை தங்கள் பக்கம் வலைத்துக்கொண்டது பாஜக. அதன்பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி தொடங்கியதில் இருந்தே இரண்டு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலின்போது கூட பா.ஜ.க பெயரைப் பயன்படுத்தினால் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குக்கூட கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடி பெயர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவையை தவிர்த்தே பிரசாரம் செய்தது.
மேலும் அண்ணாமலை போன்ற பா.ஜ.கவினர், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும் கூறி வருகின்றனர். இது அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அண்ணாமலையில் நடவடிக்கைக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து இரு தரப்பினர்க்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் இரண்டு கட்சியினரும் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அண்மையில் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து அவதூறு செய்தி பரப்பியது தமிழ்நாட்டு மக்களிடம் கண்டனங்களை எழுப்பியது. தொடர்ந்து திமுகவும் அண்ணாமலைக்கு கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், அதிமுகவும் அண்ணாமலைக்கு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்தது.
இதனால் மீண்டும் பாஜக, அதிமுகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் கடுமையாக சாடிக்கொண்டனர். அப்போது "இது துப்பாக்கி பிடித்த கை.. திருடனுக்கு தான் போலீசை பார்த்தால் பயம் வரும்.."என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகளை பார்த்து அண்ணாமலை கடுமையாக பேசினார். இது உச்சகட்டமாக மாறவே இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்தது.
தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட்டணி இல்லை என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன், "எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை பிஜேபி காப்பாற்றியதா ? அச்சுறுத்தியதா ?" என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு :
"கொஞ்சம் பழைய சம்பவங்களை திரும்பிப் பார்க்கலாமா..
2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்
2016 டிசம்பர் 10-ம் தேதி போயஸ் கார்டனுடன் நெருக்கமாக இருந்தார் என்று கூறப்பட்ட மணல் வியாபாரி சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
ஜெயலலிதா இறந்த அடுத்த 15 தினங்களில் 2016 டிசம்பர் 21-ம் தேதி தலைமைச்செயலகத்தில் மற்றும் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் IT சோதனை நடத்தப்பட்டது
2017- பிப்ரவரி மாதம் 7-ம் தேதி சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் தூண்டிவிடப்பட்டார்
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
2017 ஏப்ரல்7-ம் தேதி RK நகர் தேர்தல் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது
2017- ஏப்ரல் 10-ம் தேதி RK நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது
2017 ஏப்ரல்17-ம் தேதி இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக TTV தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்தது
2017 ஏப்ரல் 19-ம் தேதி சசிகலா குடும்பத்தை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு
2017-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி TTV தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் -21-ம் தேதி OPS மற்றும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒன்றிணைந்தனர். அடுத்த தினமே TTV தினகரன் ஆதரவு MLA-க்கள் OPS-உடன் இணைந்ததற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்
2017 ஆகஸ்ட்24-ம் தேதி பிஜேபி தேசியசெயலாளராக இருந்த H.ராஜா, தலைமை செயலகம் வந்து OPS-EPS இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். TTV தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவை வாபஸ் பெற்றாலும் ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்
2017 செப்டம்பர் 16-ம் தேதி H.ராஜா மீண்டும் தலைமை செயலகம் வருகிறார். அன்று அதிமுக கொறடாவாக இருந்த தாமரை ராஜேந்திரனை மீண்டும் சந்தித்து, TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யும் படி ஐடியா கொடுக்கிறார்.
2017 செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தினகரன் ஆதரவு MLA -க்கள் 18 பேரை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்கிறார்
2017 ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என 175-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது
2018 செப்டம்பர் 6-ம் தேதி குட்கா வழக்கு தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் T.K.ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது
இப்படி தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்தது தவிர பிஜேபி/ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. உண்மையில், இதெல்லாம் அதிமுகவை காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளா இல்லை அச்சுறுத்த மேற்கொள்ளப்பட்டதா ? இவ்வளவுக்கும் பிறகே பிஜேபியுடன் கூட்டணி அமைத்து 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது அதிமுக..
ஆனால் நெல்லிக்காய் மூட்டைப்போல இருந்த அதிமுகவை கயிறு போட்டு கட்டி இழுத்து,, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை காப்பாற்றதமிழ்நாடு பிஜேபி படாத பாடு பட்டதாகவும்,,கயிறை இழுத்து பிடித்ததில் எங்களது கை எவ்வளவு வலிச்சதுன்னு எங்களுக்கு தானே தெரியும் என்கிறார் H.ராஜா. நாங்க (அதாவது பிஜேபி) இல்லேன்னா அதிமுக என்ற கட்சியே இன்று இருக்காது என்று வேறு கூறுகிறார்
எப்படி ! எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை பிஜேபி காப்பாற்றியதா இல்லை அச்சுறுத்தியதா?"
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!