Tamilnadu
இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானி.. பசுமை புரட்சியின் தந்தை : யார் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்?
வேளாண்மையின் தந்தையும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சென்னையில் இன்று காலை காலமானார். அவரது மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில், "பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
யார் இந்த எம்.எஸ். சுவாமிநாதன்?
1925 ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஆகியவற்றில் விவசாயத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை முடித்தார்.
1960கள் மற்றும் 1970களில் இந்தியாவில் நவீன விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து பசியை போக்கினார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இது 'கோதுமை புரட்சி' என்று அவரை பாராட்டினார்.
இப்படி வேளாண் துறையில் அபரிவித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்துள்ளார் எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் இவரது பங்களிப்பிற்காக பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உட்படப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் 38 பல்கலைக்கழகங்கள் எம்.எஸ்.சுவாமிநாதனுக்குக் கவுரவ டாக்கடர் பட்டம் வழங்கியுள்ளது. உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.வி சுவாமிநாதன் இன்று காலமானார்.
Also Read
-
”இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
”கருவின் பாலினம் அறிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” : மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை!
-
ஆளுநர் உத்தரவை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம் : சர்வாதிகாரத்திற்கு கிடைத்த பதிலடி!
-
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் : உடனே நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு - நடந்தது என்ன?
-
பாஜக கடவுளை அவமதிப்பது இது முதல் முறையல்ல.. பட்டியலிட்டு விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட்!