Tamilnadu

3 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு: இளைஞரணி மாநாடு குறித்து உதயநிதி ஸ்டாலின் சொன்ன அப்டேட்!

தி.மு.க இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காகச் சேலம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடத்தை இன்று இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " இளைஞரணியின் மாநாட்டிற்கான பணி தொடங்கிவிட்டது. 100 ஏக்கர் பரப்பளவில் 3.5 லட்சம் இளைஞர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கழகத்தின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சியும் இடம்பெற உள்ளன.

இந்த மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள், கழகத்தின் வரலாறு குறித்து இளைஞர்களுக்குத் தெரிவிக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. திராவிட மடல் அரசு சாதனை திட்டங்களை விளக்கும் வகையில் இந்த மாநாடு அமைய உள்ளது.

பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கு இடையே உள்ள பிரச்சனை அவர்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ED வழக்கு உள்ளது. இதனால் நாளையே மோடியும், அமித்ஷாவும் அழைத்தால் உடனே மீண்டும் இணைந்து விடுவார்கள்.

ஒன்றிய பா.ஜ.கவின் 7.5 லட்சம் ஊழல் குறித்து CAG அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஊழலை மறைக்கத்தான் பொய்யான பிரச்சாரங்களை பா.ஜ.க செய்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் வீட்டிற்கு அனுப்புவது உறுதி.

கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் மகளிர் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய 21 நாள் கால அவகாசம் உள்ளது. ஆகையால் மீண்டும் பதிவு செய்து தகுதியான அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “உட்கார வைத்து பேசுங்கள்.. அதுதான் சக மனிதருடைய சுயமரியாதை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!