Tamilnadu

”பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் முன்னோடி திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு வெறும் டெபிட் கார்டு அல்ல. இது மகளிரின் வாழ்க்கையை மாற்றும் துருப்பு சீட்டு.

நமது திராவிடமாடல் கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை தற்போது கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய மூன்றால் பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்று பெரியார் கூறினார்.

தற்போது பெரியார், அண்ணா, கலைஞரின் கனவை நிறைவேற்றியுள்ளது இந்த மகளிர் உரிமைத் திட்டம். பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட திராவிட மாடல் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. வீட்டோடு முடங்காமல் அனைத்து பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். வீட்டில் அரசியல் பேசவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகும்" என தெரிவித்தார்.

Also Read: 5 பெண் ஓதுவார்கள் நியமனம்.. கருவறைக்குள் பாகுபாட்டை தகர்த்த திராவிட மாடல் அரசு : குவியும் பாராட்டு !