Tamilnadu

கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்த கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தந்தை மகன்: சோகத்தில் கிராமம்!

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதிக்கு பிரசாந்தினி என்ற மகளும், பிரவீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் பொன்னூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் பிறந்த நாள் விழாவிற்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து இவர்கள் வந்தவாசி அருகே வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் கார் சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார்.

இதுபற்றி அங்கிருந்து வந்த போலிஸார் உயிரிழந்த பிரவீன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த இளவரசன், மகள் பிரசாந்தினி ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்குச் செல்லும் வழியில் இளவரசன் உயிரிழந்தனர். மகள் பிரசாந்தினி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்துகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்தால் தேசம் பாதுகாக்கப்படும்"..கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை!