Tamilnadu

டெங்கு காய்ச்சல்.. மக்கள் பதற்றப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸின் 15 ஆம் ஆண்டு விழா சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் 15,46,6551 கோடி பேர் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் தற்போது வரை பயனடைந்துள்ளனர். டெங்குகாய்ச்சல் காரணமாக இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் 300 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே நலமுடன் இருக்கின்றனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாளை கலைஞர் நூற்றாண்டு பன்மைக்கு மருத்துவமனை வளாகத்தில் மாநில அளவிலான கூட்டம் நடக்கிறது. அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டங்களில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்ய PWD , மாநகராட்சி , வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். இவர்கள் கண்காணிப்பு பனிகளில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவாரூரில் பயிற்சி மருத்துவ மாணவி இறப்பிற்கு டெங்குவோ, டைபாய்டோ காரணம் அல்ல. அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சையிலிருந்துள்ளார்.

டெங்குகாய்ச்சல் பொறுத்தவரை எந்த மாவட்டத்திலும் தீவிர பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது. தேவையற்ற பதட்டத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம். கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்த தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகளை எல்லையோர மாவட்டங்களில் தீவிரப்படுத்தியுள்ளோம். நிபா அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் இல்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: பேரறிஞர் காட்டிய பாதையில்.. இந்தியாவை மீட்கும் வேட்கை தீ நாடெங்கும் பரவட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!