Tamilnadu

தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகள்.. அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு !

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அண்மையில் 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் கடந்த 23ம் தேதி மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்டது. இந்தியாவே பெருமைப்படும் தருணமாக அமைந்துள்ள இந்த நிகழ்வுக்கு இயக்குநராக பணியாற்றியவர் ஒரு தமிழர் ஆவார்.

வீர முத்துவேல் உட்பட பலரும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். உலகமே இன்று வியக்கும் இந்தியாவின் இந்த சாதனை தமிழர்களும் முக்கிய புள்ளிகளாக இருக்கும் நிலையில், சந்திரயான் குறித்து தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் 162 பேர் கலந்து கொண்டனர், அவர்களிடம் தமிழ் கூடல் நிகழ்ச்சிக்கான விதியை வழங்கிய பின் அமைச்சர் அன்பின் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை எடுத்துக்காட்டும் வகையில் சந்திரயான் திட்டம் அமைந்திருந்ததால் அது குறித்து சிறிய அளவிலேனும் பாடப்பகுதியில் இடம்பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நீதி அரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு கூடுதலாக ஒரு தேர்வை நடத்தாமல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்குரிய பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 149 அரசாணை திரும்ப பெறுவதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பெறப்படும். தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக நடத்துவதற்கு தனியார் பள்ளி நிர்வாகத்துடன் இன்னும் சில தினங்களில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. " என்றார்.

பின்னர், தமிழ்நாடு அரசு கொண்டுவரும் மாநில கல்வி கொள்கைக்கு யுஜிசி தலைவர் அதிருப்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், "அவர்கள் வந்தே பாரத் ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பார்க்க வேண்டும், அதன் பின் தமிழகத்தின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்கூடாக பார்த்த பிறகு ஆளுநர் உள்ளிட்டவர்கள் மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்" என்றார்.

மேலும் "மாநிலக் கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ஒப்புதல் தராவிட்டாலும் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை மூலம் ஒப்புதல் பெற முயற்சி எடுக்கப்படும்" என்றார்

Also Read: அரசு பள்ளி மாணவி To ஆதித்யா L1 இயக்குநர்.. இஸ்ரோவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்: யார் இந்த நிகர்ஷாஜி?