Tamilnadu

பெற்றோர்களே உஷார்.. ஆல் அவுட் குடித்த 2 வயது பெண் குழந்தை பலி: சென்னையில் நடந்த சோகம்!

சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்குச் சக்தி, லட்சுமி என இரண்டு வயது பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை பாலாஜி வழக்கம்போல் டிரைவர் வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மனைவி மற்றும் தாத்தா, குழந்தைகள் இருந்துள்ளனர். பின்னர் தாத்தா கடைக்குச் சென்றுள்ளார்.

இதனால் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நந்தினி கழிவறைக்குச் சென்றுள்ளார். அந்நேரம் மூத்த மகள் சக்தி வீட்டிலிருந்த ஆல் அவுட்டை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

இதை பிடுங்கிய இரண்டாவது மகள் லட்சுமி அதை எடுத்து வாயில் வைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையிடம் இருந்து ஆல் அவுட்டை எடுத்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே குழந்தை லட்சுமியின் வாயில் நுரை வந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இதுபற்றி கணவனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். பிறகு அருகே இருந்தவர்கள் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வந்த குழந்தை லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆல் அவுட் குடித்து 2 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உலகமகா டோல்கேட் ஊழல்: CAG அறிக்கையின் இன்னொரு குண்டு.. மோடி அரசை வெளுத்து வாங்கிய சு. வெங்கடேசன் MP !