Tamilnadu
முடித்து வைக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் வழக்குகளை விசாரிப்பதின் உள்நோக்கம் என்ன? : ஆர்.எஸ்.பாரதி கேள்வி!
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு எதிராக உத்தரவிட்டதால் எந்த அளவுக்குப் பழிவாங்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, " சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் முடிவு எடுத்துள்ளது குறித்து பெரிதாகப் பேசப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.
நீதிமன்றம் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை உள்ளது. பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தை நாடி நல்ல தீர்ப்பைப் பெற்றுள்ளோம். குறிப்பாக ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கைச் சொல்லலாம். கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் இடம் வழங்க அன்றைய அரசு மறுத்தபோது, நீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தித் தான் நாங்கள் அந்த உரிமையைப் பெற்றோம் என்பது வரலாறு.
கடந்த காலங்களில், குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு எதிராக உத்தரவிட்டதால் எந்த அளவுக்குப் பழிவாங்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது முறைகேடு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடர்ந்தபோது, விசாரணை நடத்த உத்தரவிட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கினார். மீண்டும் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.
அதே நீதிபதி, இன்று அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது முடிந்த வழக்குகளை விசாரிக்கிறார். ஏற்கனவே இதேபோன்ற வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் எந்த முகாந்திரம் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்களோ, அதே அடிப்படையில் தான் தி.மு.க அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால் அந்த வழக்குகளை எல்லாம் விட்டுவிட்டு, தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டியதன் உள்நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!