Tamilnadu

”நீட் விலக்கு பெறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை கலைவானர் அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஐந்து நாள் நடைபெறும் மாநில இளைஞர் திருவிழா - 2023 (State Youth Festival - 2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டில் உள்ள NCC,NSS மாணவர்களுக்கு மாநில அளவில் இளைஞர் திருவிழா சென்னையில் தொடங்கியுள்ளது. 250க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புகைப்படக் கண்காட்சி, பேச்சு போட்டிகள் என பல போட்டிகள் நடைபெறுகிறது.

டெல்லியில் குடியரசு தின விழா உள்ளிட்ட அணி வகுப்பில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த NCC, NSS மாணவர்கள் மூன்று நாட்கள் ரயிலில் பயணம் செய்து பங்கேற்க வேண்டியுள்ளது. இனி இவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் போராட்டம் நாடகமாகவே இருக்கட்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். இதற்காக நீங்களும் போராடுங்கள் என்றுதான் அ.தி.மு.கவை அழைக்கிறோம். நீட் விலக்கு அளித்தால் அதற்கான பாராட்டை அ.தி.மு.கவே எடுத்துக்கொள்ளட்டும். இதை அரசியலாகப் பார்க்காமல் இனி நாம் மாணவர்களை இழக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: தெலங்கானா தேர்தல் : சீட் கொடுக்க மறுப்பு.. தொண்டர்கள் முன் கீழே விழுந்து அழுத முன்னாள் முதல்வர் !