Tamilnadu

சேரில் அழுகிய நிலையில் இருந்த மருத்துவர் சடலம்.. இரத்தத்தை வெளியேற்றி தற்கொலை.. காரணம் என்ன ?

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையை சேர்ந்தவர் கார்த்தி. 2 வயதாகும் இவர் ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். ஆரம்பத்தில் சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், கொரோனா நேரத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலைக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் இவருக்கு 3 முறை கொரோனா பாதிக்கப்பட்டது.

அதிலிருந்தும் மீண்ட இவர் மீண்டும் தனது பணியை செய்து வந்தார். தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். இவரது தாயும் தந்தையும் புதுச்சேரியில் வசித்து வரும் நிலையில், தந்தையும் ஒரு மருத்துவர் ஆவர். இவருக்கு அமெரிக்காவில் திருமணமான தங்கை ஒருவரும் உள்ளார்.

ஆனால் 42 வயதாகியும் மருத்துவர் கார்த்தி திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால் அவர் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், தனது தங்கையிடம் தினமும் போனில் பேசி வந்துள்ளார். இந்த சூழலில் இவருக்கு அவரது தங்கை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் போன் செய்துள்ளார். அப்போது அதனை கார்த்தி எடுக்கவில்லை. இப்படியே 3 நாட்களாக அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் பயந்து போன தங்கை, அவரது தந்தைக்கு போன் செய்து கூறியுள்ளார். தந்தை போன் செய்தும் கார்த்தி எடுக்கவில்லை என்பதால், தங்கை தனது தோழி ஸ்ரீவித்யா என்பவருக்கு தகவல் கொடுத்து, அண்ணன் கார்த்தியை பார்த்து வர சொல்லியுள்ளார். எனவே சம்பவத்தன்று வித்யா, கார்த்தி வீட்டுக்கு சென்றுள்ளார். கதவு திறந்திருந்த நிலையில் இருந்ததால் சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது துர்நாற்றம் வீசியுள்ளது. தொடர்ந்து அறையை திறந்து பார்க்கையில், மருத்துவர் கார்த்தி கைகளில் இருந்து இரத்தம் வெளியேறிய வெளியேறியவாறு, அழுகிய நிலையில், பிணமாக நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வித்யா, கத்தி கூச்சலிட்டார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றும் ஊசியை கொண்டு உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி நூதனமுறையில் கார்த்தி இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது

தொடர்ந்து அவரது அறையை சோதனை செய்தபோது, , 'எனது வாழ்க்கை அழகாக முடிவுக்கு வந்தது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்த தற்கொலை கடிதமும் கிடைத்தது. தொடர்ந்து அது உண்மையில் தற்கொலையா அல்லது கொலையா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மருத்துவர் ஒருவர் தனது உடலில் உள்ள இரத்தத்தை ஊசியை கொண்டு வெளியேற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: காதலன் உயிரிழப்பு.. 2 மாதம் கழித்து விபரீத முடிவெடுத்த காதலி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!