Tamilnadu

“நான்தான் அடிச்சு கொன்றேன்..” - வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்த வழக்கில் தாய் அதிர்ச்சி !

சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது புளியம்பேடு. இங்கு வசித்து வரும் ஹரி என்ற நபர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 23 வயதில் பூவரசன் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் பூவரசன், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் நேற்றைய முன்தினம் தந்தை ஹரி வழக்கம்போல் தனது பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். எனவே இரவு நேரத்தில் தாய் மற்றும் மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். மறுநாள் காலையில் கணவர் ஹரி வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. மகன் மற்றும் மனைவிக்கு போன் செய்தும் அது எடுக்கப்படவில்லை.

இதனால் பயந்துபோன ஹரி, அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கே மகனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றார். அங்கே இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகன் பூவரசன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து மனைவி செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து இரத்த கறையோடு இரும்பு கம்பியை மீட்டனர்.

பின்னர் மயக்க நிலையில் இருந்து கண் விழித்த செல்வியிடம் விசாரிக்கையில், தான்தான் தனது மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் செல்வி, கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதனாலே மகனை அடித்து கொன்றதும், கொலை செய்த பின்னர் தனது தலையில் தானே தாக்கி கொண்டதில் மயக்கம் அடைந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பக்கத்து வீட்டாருடன் சண்டை.. ஆத்திரத்தில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்ட காவலாளி -காரணம் என்ன?