Tamilnadu

“மூவர்ணக் கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்..”: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மதராஸ் மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.

1968-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழ் மண்ணின் முதலமைச்சராக ஆன பிறகுதான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. 'ஒரே ஒரு சங்கரலிங்கனார் தான் செத்துப் போயிருக்கிறார் என்று நினைப்பீர்களேயானால் தமிழ்நாடு என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் சேர்த்து ஐந்து உயிர்களைத் தரத் தயாராக இருக்கிறோம்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள்!

'எல்லாரும் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப் பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?' என்று கேட்டவர் தந்தை பெரியார். இத்தகைய பார்போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன்.

400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தக் கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்கள்!

Also Read: சுதந்திரம் 77 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்புக் கட்டுரை!