Tamilnadu

திடீரென வந்த புகை.. மளமளவென பற்றிய தீயால் அலறியடித்து ஓடிய மக்கள்: பிரபல தனியார் துணிக்கடையில் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்த மாதத்தில் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் எதுவும் நடக்காது. எனவே இந்த மாதத்தில் ஜவுளி கடைகளில் விற்பனை குறையும் என்பதால் அனைத்து துணி கடைகளிலும் தள்ளுபடி என்ற பெயரில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த மாதத்தில் துணிகள் வாங்கினால், அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி கிடைக்கும்.

இதனால் மக்கள் இந்த மாதத்தில் துணிக்கடைகளில் குவிந்து காணப்படுவர். அப்போது சில நேரங்களில் விபத்து ஏற்படும். மேலும் சில துணி மணிகள் காணாமல் போகும். இதனாலே பெரிய பெரிய கடைகளில் தனியாக சோதனைக்கு என்று ஆள் வைத்திருப்பர். இந்த சூழலில் கும்பகோணத்தில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் 'சென்னை சில்க்ஸ்' துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாநிலம் முழுவதும் இருந்து பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு தற்போது ஆடி மாத அமோக சேல் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த ஆடி மாதம் இன்னும் 2 நாட்களில் நிறைவடையவுள்ளது. எனவே நாள்தோறும் இங்கு மக்கள் துணிகள் வாங்க வருகை தருகின்ற்னர்.

இந்த சூழலில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள், இங்கு துணி வாங்க குவிந்துள்ளனர். அப்போது திடீரென அந்த கடையின் முகப்பு பகுதியிலிருந்து இரவு சுமார் 7.30 மணியளவில் புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் தெறிக்கவே, அவர்கள் புகை வருவதை கண்டனர்.

ஆனால் அதற்குள்ளும் தீ பற்றிக்கொள்ளவே சக ஊழியர்கள் உடனடியாக பொதுமக்களுக்கு தெரிவித்து வெளியேறும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில் அங்கிருந்து ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் அலரடியடித்து அங்கிருந்து வெளியேறினர். அதுமட்டுமின்றி எதிர்புறம் இருந்த கடைகள், மருத்துமனையில் இருந்தும் மக்கள் வெளியேறினர்.

தொடர்ந்து இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், 3க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீயால் சுமார் 3 கி.மீ வரை புகை மூட்டம் பரவி இருந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரத்தையும் மின் துறையினர் துண்டித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ பிடிக்க காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் மற்றும் மின் சாதனங்களால் தீ பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து முழுமையாக விசாரித்து வர்கின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: நாங்குநேரி கொடூரம்.. கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர்.. உறுதி செய்த திமுக மாவட்ட செயலாளர்!