Tamilnadu

ஏரியில் குளித்த கல்லூரி மாணவர்.. நண்பர்கள் கண் எதிரே நேர்ந்த துயரம் : நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன். இவர் சென்னை அடுத்த ஆவடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்லூரி விடுதியில் தங்கி தினமும் வகுப்புக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கிருத்திகை என்பதால் மாவட்ட அளவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் வெள்ளனூர் ஏரியில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் குளிப்பதற்கு முன் நண்பர்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பவன் மது அருந்திவிட்டு ஏரியில் குளிப்பதற்காக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது உடன் இருந்த நண்பர்கள் ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். இருந்தாலும் அவர்கள் பேச்சைக் கேட்காமல் பவன் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பவன் ஏரியில் மூழ்கியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இது குறித்து ஆவடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பவன் உடலைச் சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் கண்முன்னே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தாய்க்கு பாலியல் தொல்லை.. தடுக்க சென்ற மகனுக்கு கத்தி குத்து.. மும்பையில் ஓடும் இரயிலில் நடந்த கொடூரம் !