Tamilnadu

நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமி.. பைக்கில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் அதிரடி கைது !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதி ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் கடந்த 5-ம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள இடத்தில் தன்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதனை கண்ட 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமியை காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி மிரட்டி இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். அந்த சிறுமியை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று கட்டாயப்படுத்தி அனைவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதோடு அந்த சிறுமியை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு இதனை வெளியே சொன்னால் சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த காட்டுப்பகுதியில் இருந்து தப்பித்து ஓடி வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை கதறி அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்த தாய், மருத்துவமனையில் தனது மகளை அனுமதிதோடு, உடனடியாக இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரித்ததில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார் (31), ஜான்சன் (26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (26) ஆகிய 3 பேரை போக்ஸோ, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மீதி ஒருவரையும் போலீசார் தீவிரமாகி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே ஒரு குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருமணம் முடிந்து 6 மாதத்தில் ரயில் முன் பாய்ந்த காதல் மனைவி.. கணவரும் அதே முடிவெடுத்ததால் அதிர்ச்சி !