Tamilnadu

அழுது கொண்டே இருந்த 2 மாத குழந்தை.. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரச் செயல்: அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர்கள் குடும்பத்துடன் திருவள்ளூர் பெரிய குப்பம் மேம்பாலம் கீழே வசித்து வருகின்றனர். பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் சேகரித்து அதை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று பிறந்த 2 மாதமே ஆன இவர்களது பெண் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. அப்போது தாய் குழந்தைக்குப் பால் கொடுக்காமல் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் சுரேஷ் அருகே இருந்த குழந்தையைத் தூக்கி வீசியுள்ளார். இதில் கீழே விழுந்த குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பிறகு குழந்தையை மீட்ட திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளனர். அங்குச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து திருவள்ளூர் நகர போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அதிகாலையில் நடந்த கொடூரம்.. தலைகுப்புற கவிழ்ந்த சொகுசு பேருந்து : 2 பயணிகள் உடல் நசுங்கி பலி!