Tamilnadu

”100 ரூபா கொடு”.. சாலையோர பிரியாணி கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க கவுன்சிலர்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகச் சிற்றுண்டிகள் மற்றும் உணவகங்களை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விருத்தாசலம் நகர மன்ற ஐந்தாவது வார்டு கவுன்சிலர் அ.தி.மு.கவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சாலையோர கடை வைத்திருப்பவர்களிடம் தினமும் மாமூல் வசூலித்து வருகிறார். பணம் தரமுடியாது என கூறுபவர்களிடம் "காசு கொடுக்க முடியாதுனா, இங்க கடை போட முடியாது" என மிரட்டி அவர்களிடம் பணத்தை வசூல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவர் இப்படி தினமும் மாமூல் வசூலிப்பதால் தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை செய்து வரும் இளைஞர் ஒருவர் கவுன்சிலர் ராஜேந்திரனிடம் முறையிட்டுள்ளார். "தினமும் 100 ரூபாய் பணம் வாங்கிச் சென்றால் எங்களால் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்" என கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராஜேந்திரன், "பணம் கொடுக்க முடியாது என்றால் இங்குக் கடைபோட முடியாது "என மிரட்டியுள்ளார். அப்போது உணவு சாப்பிட வந்த வாடிக்கையாளரும் "நீங்கள் மக்களுக்காக தானே இருக்கிங்க, ஏன் இப்படிக் காசு வாங்குறீங்களே" என கேட்ட அவரையும் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கவுன்சிலர் ராஜேந்திரனுக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: பற்றி எரிந்த 16 மாடி குடியிருப்பு.. குழந்தைகளை தூக்கி வீசிய பெற்றோர்கள் : திகிலூட்டும் சம்பவம்!