Tamilnadu

அமெரிக்காவிற்கு தப்ப முயன்ற குற்றவாளி.. ஒராண்டுக்கு பின் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து செல்வகுமார் கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவானார். இவரை போலிஸார் தேடி வந்தனர். ஆனால் இவர் போலிஸாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் செல்வகுமார் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து செல்வகுமாரைத் தேடிப்படும் குற்றவாளியாக அறிவித்தது போலிஸ். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், செல்வக்குமார் மீது தேடப்படும் குற்றவாளி என விவரங்கள் கொடுக்கப்பட்டடுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு செல்வகுமார் வந்துள்ளார்.

அப்போது அவரது கடவுச்சீட்டு ஆவணங்களை ஆய்வு செய்வது போல் செல்வகுமார் ஒரு ஆண்டாக போலிஸாரால் தேடப்படும் குற்றவாளி எனத் தெரியவந்தது. உடனே அவருடைய பயணத்தைக் குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

அதோடு அவரை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, மதுரை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த மதுரை மாவட்ட தனிப்படை போலிஸார் செல்வகுமாரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

Also Read: போலி பத்திரப்பதிவு தயாரித்து கோயில் நிலத்தை அபகரித்த பாஜக MLAக்கள் : கைது செய்ய வலியுறுத்தும் CPI கட்சி!