Tamilnadu

”பிரதமர் மோடிக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை ”.. தயாநிதி மாறன் MP கடும் விமர்சனம்!

மனிதாபிமானம் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜ.கதான். மனிதாபிமானம் இல்லாதவர்கள் யார் என்றால் அது மோடி மற்றும் அமித்ஷாதான் என தயாநிதி மாறன் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி, "ஒருவரை நாம் குறை சொல்ல வேண்டும் என்றால் முதலில் தனது முதுகைத் திரும்பிப் பார்க்க வேண்டும். மனிதாபிமானம் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜ.கதான். மனிதாபிமானம் இல்லாதவர்கள் யார் என்றால் அது மோடியும் அமித்ஷாவும்தான்.

மூன்று மாதம் ஆகிவிட்டது. மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறிவருகிறது பா.ஜ.க அரசு. இந்தியாவில் பெண்களைக் கடவுளாக பார்ப்பார்கள். இந்நாட்டில் தான் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

நாட்டை காப்பாற்றுவதற்காக கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவியை வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூரங்களைப் பற்றி எல்லாம் கவலைப் படாத அரசாக பா.ஜ.க அரசு உள்ளது. இது பற்றி பேசாமல் மவுனமாக இருந்து வருகிறார் பிரதமர் மோடி.

9 ஆண்டாக பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை. அனைத்து அத்தியாவசிய விலைகளையும் உயர்த்தியதுதான் இவர்களது சாதனை. தமிழ்நாட்டிற்காக ஒன்றிய அரசு என்ன செய்தது?, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை நடக்கவில்லை. இப்படி இவர்கள் தமிழ்நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் துரோகம் மட்டுமே செய்து வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: NLC-ல் வெளிநபர்களால் வன்முறை.. தமிழ்நாடு அரசு வன்முறையை ஒருபோதும் அனுமதிக்காது -அமைச்சர் தங்கம் தென்னரசு!