Tamilnadu

”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்; ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை”.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்பிரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்களில் பின்பற்றக்கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோவில் அர்ச்சகர்களிடமிருந்து, இருந்து தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய குருக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்,"யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது .இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆகம கோவில்களில் அர்ச்சகர்களைப் பரம்பரையாக உள்ளவர்களைதான் நியமிக்க வேண்டும் என்றும், தனிநீதிபதியின் உத்தரவு உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் வாதிட்டார். எனவே இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி இதே மனுதாரர்தான், "ஆகம கோவில்கள் எது, ஆகம பின்பற்றதா கோயில்கள் எது என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும்,தமிழகம் முழுவதும் 2405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் ஆகம கோவில் தான் என எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 22 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மறுத்துவிட்டனர்.

Also Read: மணிப்பூர் வன்முறையில் தப்பித்து சென்னை வந்த குடும்பம்.. அரசு எடுத்த துரித நடவடிக்கை!