Tamilnadu

நாகர்கோவிலில் 6 மாத குழந்தை கடத்தல்.. கேரளாவில் மீட்ட போலிஸ்: குற்றவாளிகளை காட்டிக் கொடுத்த CCTV!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மனைவி ஜோதிகா. இந்த தம்பதியினர் தங்களது 6 மாத ஆண் குழந்தை ஹரியுடன் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் ஊசி மற்றும் பாசி வியாபாரம் செய்து வந்தனர்.

இவர்கள் ஜூலை 23 ம் தேதி இரவு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தர். அப்போது பெண் ஒருவர் தம்பதிகள் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஹரியை தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் குழந்தை காணாதது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்த போது அந்த பெண் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலிஸார் கேரளா சென்றனர்.

இதையடுத்து கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் 6 மாத குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் விசாரித்தபோது நகார் கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண்ணையும் அவருடன் இருந்த ஆண் நபரையும் போலிஸார் கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அப்பெண் வடகோட்டைப் பகுதியைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது கணவர் நாராயணன் என்பதும் குழந்தையைத் திருடி , பிச்சை எடுக்கப் பயன்படுத்த எண்ணிக் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், மீட்ட குழந்தையைப் பெற்றோருடன் ஒப்படைத்தார். அப்போது குழந்தையை மீட்டுக் கொடுத்த போலிஸாருக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

Also Read: பிரியாணி சாப்பிடச் சென்ற ஊழியர்கள்.. ஒரு நொடியில் ரூ.4 லட்சத்தை இழந்த வியாபாரி: நடந்தது என்ன?