Tamilnadu

மணிப்பூர் கொடூரம்.. நடவடிக்கை எடுத்தாத ஒன்றிய, மாநில பாஜக அரசுகள்.. தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டம் !

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளது. இந்த வீடியோ உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டிலும் மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசை பதவி விலக்கோரியும், பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு நீதிவழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைப் போல தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இது தவிர இந்த விவகாரம் குறித்து திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுக்க இன்று போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியா கேட்கிறது.. பதில் சொல்லுங்கள் பிரதமரே?: நாடாளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி போராட்டம்!