Tamilnadu

சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் வியாபாரி கொலை வழக்கு.. தங்கை உட்பட 5 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன ?

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. பெண் வியாபாரியான இவர், புறநகர் இரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து வருகிறார். இந்த சூழலில் இவர் கடந்த 19-ம் தேதி சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்தபோது, அவரை பகல் நேரத்தில் சுமார் 2.00 மணி அளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் அறிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், அவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரியை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நாகே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றது தெரியவந்தது. தொடர்ந்து இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், போலீசார் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் என 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இரயில்வே எஸ்.பி. பொன்ராமு சம்பவத்தை விளக்கினார்.

இதுகுறித்து பேசிய அவர், "சைதாப்பேட்டை கொலை சம்பந்தமாக மேலும் விசாரிக்கையில், இறந்து போனவரும் அவரை கொலை செய்தவர்களும் புறநகர் இரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து வருபவர்கள் ஆவர். இதில் இறந்து போன ராஜேஸ்வரிக்கும் சக்தி என்ற சக்திவேல் மற்றும் ஜெகதீஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

கொலையாளிகள் ஐந்து பேரை தீவிரமாக கண்காணித்து கைது செய்துள்ளோம். சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மூன்று பேரை கோவளம் அருகில் கைது செய்து விசாரணை நடத்தினோம் மேலும் இரண்டு பேரை நங்கநல்லூர் அருகே உள்ள உள்ளகரத்தில் கைது செய்தோம். இதில் சக்தி, ஜெகதீஸ் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது." என்றார்.

தொடர்ந்து பேசுகையில், "கொருக்குபேட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் இரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி, அலுவலக நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்டரல், எழும்பூர் போன்ற இரயில் நிலையங்களில் சோதனை அதிகளிவில் உள்ளது. அதே சமயத்தில் உள்ளூர் இரயில் நிலையங்களில் இது போன்று கண்காணிக்கப்படுவதில்லை. இருப்பினும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.

கடந்த 6 மாதத்தில் இரயில்வே போலீசார் மூலம் இதுவரை 131 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது; 847 கிலோ கஞ்சா, 92 போன்கள், 12 லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத அனைத்து இரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை துரிதப்படுத்தி உள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கபப்டும். எனவே பெண்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் பெண்களின் பாதுகாப்பு இரயில்வே போலீசார் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்" என்றார்.

Also Read: முன் விரோதம்.. 73 பேர் சாட்சி.. பக்கத்து வீட்டு சிறுமி பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !