Tamilnadu

ஒரு கோடிக்கு மேல் அதிகரித்த கடன்.. மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த தம்பதி: உறவினர்கள் அதிர்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ். இவர் திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி. இவர் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது பெற்றோர்கள் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு கதறி அழுதுள்ளனர். இவர்கள் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு விரைந்து வந்த போலிஸார் தம்பதிகள் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆட்டோமொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்குத் தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார் பொன்னுதாஸ். கடன் சுமை அதிகரித்ததால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மன்னிப்பு கேட்பதின் மூலம் சரிகட்டிவிட முடியாது..” : SV சேகர் வழக்கில் ஐகோர்ட் அதிரடி - விரைவில் கைதா?