Tamilnadu

திருமணமாகாத ஆண்களே குறி.. ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் மோசடி:இளம்பெண்ணை கையும் களவுமாக பிடித்த போலிஸ்

சென்னை அருகே இருக்கும் அயப்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக் சைதன்யா. 34 வயதான இவர், கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆந்திராவை சொந்தமாக கொண்ட இவர் பல மாதங்களாக இங்கு பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு இவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். மேலும் இவரை மேட்ரிமோனியல் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

அதன்பேரில் இவரும் செய்துள்ளார். அப்போது ஆந்திராவை சேர்ந்த ஷ்ரவண சந்தியா என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் இருவரும் மொபைல் எண்கள் பரிமாற்றம் செய்து பேசி வந்துள்ளனர். மேலும் தனது புகைப்படங்களையும் சந்தியா, அசோக்குக்கு அனுப்பியுள்ளார். இருவரும் இப்படியே தொடர்ந்து பேசி வந்த நிலையில், திருமணம் குறித்த பேச்சுகளும் எடுபட்டுள்ளது.

சந்தியாவும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஆனால் தனக்கு சில பண பிரச்னைகள் உள்ளதாக சந்தியா கூறியதால், அதனை நம்பியுள்ளார் அசோக். மேலும் தன்னிடம் இருந்த பணத்தையும் அவ்வபோது கொடுத்து உதவி வந்துள்ளார். இவ்வாறாக பல தவணைகளில் சுமார் 9 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.

மேலும் தனது வருங்கால மனைவி சந்தியாவுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போனையும் பரிசாக அவரது முகவரிக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அசோக்கும் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியே காலத்தை தாழ்த்தி வந்த நிலையில், அசோக்குக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அவரது மொபைல் எண்ணை ஆப் செய்து வைத்துள்ளார் சந்தியா. பின்னரே தான் ஏமாற்றப்பட்டத்தை அசோக் உணர்ந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அசோக், இது குறித்து ஆவடி காவல் ஆணையரக இணைதளம் வாயிலாக புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து சந்தியாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டனர்.

பின்னர் பெங்களுருவுக்கு விரைந்த போலீசார், அங்கு பதுங்கியிருந்த சந்தியாவை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அசோக் போல் சிலரை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் அசோக்குக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம் ஒரு சினிமா நடிகையின் புகைப்படம் எனவும் கண்டறியப்பட்டது.

மேலும் திருமணமாகாத ஆண்களை நோட்டமிட்டு, அவர்களிடம் பேசி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து பணத்தை அபகரித்து விட்டு ஏமாற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது போன்ற பெண்களிடம் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Also Read: கணவர் பிறந்தநாளுக்கு Surprise கொடுக்க வந்த மனைவி.. திடீரென 2 குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு: நடந்தது?