Tamilnadu

இந்தியாவிலேயே முதன்முறை.. Microsoft நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது என ள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதம் வருமாறு:-

TEALS(Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சர் அவர்கள் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார்கள். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமபுற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TEALS எனும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டுமென இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் போட்டியிட்டது! ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் தமிழ்நாடு மாநிலம் முதன்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமையாகும்.

முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மிக விரைவில் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மைக்ரோசாப்ட் இயக்குனர்கள் பங்குபெறும் TEALS திட்டத் தொடக்க விழா தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கின்றது. இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

இதற்கு உறுதுணையாக விளங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிசில் சுந்தர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அதிவேகமாக 10 மில்லியன் பயனர்கள்.. சாதனைகளை நொறுக்கித்தள்ளிய மெட்டாவின் 'Threads' செயலி !